Pages

Sunday, September 25, 2011

திண்ணை.காம்: இறப்பு முதல், இறப்பு வரை- பாகம் 1

இது ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட படைப்பு!

காலை ஆறு மணி..

"பாலக் கறந்துட்டியா? கிளம்பவா?", குளித்து முடித்து வெளியே வந்த மணி, தன் மகன் இளவரசனிடம் கேட்டது.

குளியல் அறை என்று கூற முடியாத ஒரு ஓலைக் கூடு. அதன் மறைப்புத் தடுப்பை (கதவு என்றும் கூற முடியாது) தூக்கி, வெளிப் பக்கமாகத் தள்ளி வைத்து, வெளியே வருவதற்கு வழி செய்தார் மணி. அவர் குளித்து முடித்துவிட்டு உடம்பை ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் உலர்த்திக் கொள்வதைப் பார்க்க இளைய மகன் இளவரசனுக்குப் பிடிக்கும். பெரியவன் மகாராஜன். அவனுக்கு படிப்பது தான் குறிக்கோள். மணியின் குளியல் காட்சிகளில் விருப்பம் இல்லை.

"ந்துட்டேன். நான் போயிட்டு வரவா?", பால் பாத்திரத்துடன் இளவரசன் எழுந்தான். ஆனால்,

"எதுக்கு? பால் குடுத்துட்டு வீட்டுக்கு வர நேரம் ஆயிடுச்சுன்னு காரணம் சொல்லி பள்ளிக் கூடத்துக்கு போகாம போங்கு செய்யவா? நானே போறேன். நீ உன் அண்ணனோட சேந்து ஸ்கூலுக்கு போ", என்று சொல்லி பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.

இளவரசனுக்கு படிப்பென்றாலே வேப்பிலை தின்பது போலத் தான். அவனுக்கு வெளியே தெரியும் நாக்கு தான் முக்கியம். உள்ளே இயங்கும் நூத்தி எட்டு 'ஸ்பேர் பார்ட்ஸ்'-உம் இல்லாமல் போனாலும் கவலை இல்லை. படிப்பை வெறுப்பவன் என்பதால் விளையாட்டுப் பிள்ளை என்று எண்ணி விட வேண்டாம். அவனுக்கு படிப்பு வேப்பங்காயாய் கசப்பதற்கு காரணம் சோம்பேறித் தனம் அல்ல.

தன் அப்பா, நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வரும் வேலை, அவன் உடம்பில் ஊறிப் போன ஒன்றானது.

"பால் கறப்பது!" என்று சொல்லிப் பாருங்கள்.

"ஆஹா! எத்தனை அழகான வேலை. செய்யத் தயார்" என்பான்.

கையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு, பால் பாத்திரத்தை இரு தொடைகளின் இடுக்கில் சரிவாய் பிடித்துக் கொண்டு, ஒரு கை அளவு நீரை மடியில் தெளித்து, மெதுவாக அம்மெல்லிய காம்புகளை பிடித்து இழுக்க, 'சர்..சர்' என்ற சத்தத்துடன் வெளியே வரும் பாலின் வண்ணத்தை பார்க்கும் போது,

"இது தான் சந்தோசத்தின் நிறம்", என்று தோன்றும் அவனுக்கு. அதோடு,

"என் வெண்மையைப் பார்", என்று பால் அவனைக் கெஞ்ச,

"உனக்கு அழகே என்னால் தான்", என்று மேலே படியும் நுரை பாலைப் பின்னால் இழுக்க,

"நான் நிறைந்தவுடன் உனக்கு வேலையே இல்லை", என்று மறுபடியும் திமிரும் பால்-நுரை சண்டையை ரசிக்க அவனுக்குப் பிடிக்கும். தன்னிடம் திறமையை நிரூபிக்க மாறி மாறி அவை போடும் சண்டையைக் காணும்போதெல்லாம் எஜமானாக தன்னை கற்பனை செய்வான்.

பாலைக் கறந்தவுடன் அளவை அதிகரிக்க தண்ணீர் ஊற்றாமல், எத்தனை லிட்டரென்று அளக்காமல், வரும்படி எவ்வளவென்று யோசிக்காமல்,பாத்திரத்தினுள் தலையை விட்டு அப்படி என்னத்தை ரசிக்கிறான் என்று தினமும் அவன் தந்தை விநோதமாய் பார்ப்பதுண்டு. அதற்கான பதிலாய்,

"பாத்திரத்தின் உள்ளே சிதறிக்கிடக்கும் பால் துளிகளுக்கு, மழைத் தூறல்களை உவமையாக்கி ரசிக்கிறேன்", என்று சொல்லும் அளவிற்குக் கூட கல்வி அவனுக்குத் தேவைப் பட்டதில்லை. ஒருவேளை, தன் உவமையை பிறர் அறிவதால் கிடைக்கப் போகும் பாராட்டை பெறத் தான் கல்வி; எனக்கு ரசனை போதும். பாராட்டு வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டானோ என்னவோ!

"இப்போ எல்லாம் பாலை கறந்து குடுக்குறவனுக்கு எங்க மதிப்பு? அழகா பாக்கெட்- பவுடரை கலந்து கொடுத்தா எலாரும் வாங்கிக் குடிக்கிறாங்க. பேசாம உங்க பையங்களை படிக்க வையுங்க", என்று தன் அப்பாவிடம் நண்பர் கூறியபோது,

"அப்போ நான் பாலைக் கறந்து பாக்கெட்- விக்கிறேன். கறந்த பால்-னு வெளம்பரம் செஞ்சா பவுடர் பாலுக்கு பதிலா என் பாலை வாங்காமலா போய்டுவாங்க?", என்று வாதம் செய்தான்.

"பத்து வயசுல உனக்கு இவ்வளவு பேச்சு ஆகாது. பேசாம படி!" தன் மகனின் 'பாலாசை'யைப் பார்க்கும் போதெல்லாம், மணியின் மார்பு, இருநூறு முறை தோலைக் கிழித்து கீழே விழத் துடிக்கும். எப்படியும், தான் முன்னுக்கு வந்ததைப் போல, அவனும் முன்னுக்கு வந்து விடுவான் என்ற எண்ணம், துடிக்கும் மார்பிற்கு முடுக்கு போடும்.

யாராவது, "உங்களுக்கு மகாராஜன் புடிக்குமா? இளவரசன் புடிக்குமா?" என்று கேள்வி எழுப்பினால், "இருவரும் இரண்டு கண்கள்", என்று தான் எல்லோரையும் போல் கூறுவார் மணி. ஆனால் உண்மையில்,

"என் பேச்சை கேட்டு, படிப்பில் ஆர்வம் காட்டி, இந்த நாசமா போன தொழிலை விட்டு, என் வம்சத்தையும் பணக்காரங்க வரிசையில சேக்கப் போற என் மகாராஜன் தான் எனக்கு பெருசு", என்ற எண்ணம் அவருக்கு எப்போதுமே உண்டு. பணக்காரன் ஆவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கானவர்களில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா!?

"அப்பா உங்களுக்கு போன். ஊர்ல இருந்து அம்மா", வெளியே அடியெடுத்து வைத்த மணியை சப்தமிட்டு அழைத்தான் மகாராஜன்.

"என்னவாம் அவளுக்கு? பால் குடுக்கப் போற நேரத்துல என்ன போன் வேண்டிய கெடக்கு. என்ன செத்தா போய்டாங்க?", புலம்பிக் கொண்டே வந்து 'ஹலோ' சொன்னவரிடம்,

"என்னங்க! நம்ம அசோக்கு செத்து போய்டாங்க", என்று கதறினாள் பத்மா; குழந்தையின் (அசோக்) ஒரு வயது நிறைவு விழாவை கொண்டாடச் சென்ற மணியின் துணைவி!

"என்ன டி பெனாத்துற? ஆண்டு நெரவுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு, இப்படி எழவு சேதி சொல்றியே உருப்படுவியா?"

"நெஜமா தாங்க. கொழந்தைக்கு திடீர்னு இழுத்துக்கிச்சுன்னு மருத்துவச்சி கிட்ட கூட்டிகிட்டு போனோம். போற வழியிலேயே தல தொங்கிடுச்சுங்க! நீங்க வாங்க", விக்கிக் கொண்டே நடந்ததை தெரிவித்தாள் பத்மா. அவள் சொன்னதை நம்ப முடியாமல் திகைத்து நின்றார் மணி. சில நொடிகளுக்குப் பின்,

"சரி இரு வரேன். நீ மச்சானுக்கும், தேவிக்கும் தெம்பு கொடுத்துட்டு இரு", இணைப்பை துண்டிக்கப் போன மணியை நிறுத்தி,

"புள்ளைங்களையும் கூட்டிட்டு வாங்க. பையங்க குழந்தைய பொறந்ததுலேந்து பாத்ததே இல்ல", என்றாள்.

"சரி வையி! கூட்டிட்டு வரேன்", தற்காலிகமாக கீழே வைத்த பால் பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு வெளியே ஓடிய மணி, எதிர் வீடு நண்பரிடம் சென்று,

"எம் மச்சானுக்கு ஒரு மவன் பொறந்திருக்கான்னு சொன்னேன்-ல? அந்த கொழந்த இறந்து போச்சாம்", என்றார் அவசரமாக.

"அடப் பாவமே! எப்படின்னே"

"திடீர்னு இழுத்துக்கிச்சாம். மருத்துவச்சி கிட்ட காமிக்கிரதுக்குள்ள செத்துப் போச்சாம். நான் போகணும். இந்த பாலை எடுத்துட்டு போய் நான் குடுக்க வேண்டிய வீடுகள்ல கொடுத்திட முடியுமா?"

"கண்டிப்பா அண்ணே! நீங்க போயிட்டு வாங்க. எனக்கு இடம் தெரியும்", பாத்திரத்தை வாங்கிக் கொண்டார் நண்பர்.

"நன்றி முருகா. மாடுகள பாத்துக்கோ என்ன? ", என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.

"வாங்க டா பசங்களா. சாவுக்கு போகணும்", துணி மணிகளை எடுத்து ஒரு பையினுள் திணித்தபடி பிள்ளைகளை விரைவு படுத்தினார்.

"என்னப்பா இது! இன்னைக்கு அறை பரீட்சை இருக்கே!", என்றான் மகாராஜன்.

"என்னப்பா இது! இன்னைக்கு என் சிநேகிதன் குண்டில புளியாங் கொட்டை சொருகிட்டு வரேன்-னு சவால் விட்டுருக்கான். நான் போகலேன்னா ரெண்டு கொட்டைய என் குண்டியில சொருகிடுவான்!", என்றான் இளவரசன்.

"சீ! பேச்ச பாரு. என்ன கடுப்பேத்தாத! நானே சாவுக்கு எவ்வளவு செலவாகும்-னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்", குல தெய்வம் கோயிலுக்குப் போவதற்காக சேமித்து வைத்திருந்த உண்டியல் காசை உடைத்து எண்ணினார். மொத்தம், நானூற்றி ஐம்பது இருந்தது.

"இது போதாதே! சரி, இன்னைக்கு இத குடுப்போம். பொறவு, கடன வாங்கிக் கரியத்தன்னிக்கு குடுப்போம். என்ன செய்யிறது!", மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டே பணத்தை எடுத்து பையில் வைத்தார். சட்டையை மாட்டிக் கொண்டிருந்த பிள்ளைகளை, பொத்தான் போடுவதற்குள் இழுத்துச் சென்று வெளியே விட்டார். கதவை பூட்டி, துணிக்கடியில் சாவியை சொருகிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தார்.

பத்மாவின் அண்ணன் பெயர் லட்சுமி நாராயணன். அவனுக்கும், அவன் மனைவி தேவிக்கும் பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் அசோக். அவன் பிறந்தவுடன் அவ்விருவரும் கொண்ட ஆனந்தத்தை பார்த்த மணி, முதல் முறையாகத் தன் மனைவி வழிச் சொந்தத்தைப் பற்றி நல்ல ஒரு அபிப்ராயம் கொண்டார். காரணம், பத்மாவின் அப்பா, குடிபோதைக்கு ஆளாகி, அவள் பிறந்த சில நாட்களிலேயே லிவர் கேட்டுப் போய் உயிர் இழந்தார். பத்மாவின் தம்பியும், கஞ்சா கேசில் கம்பி எண்ணுகிறான். அவள் குடும்பத்திலேயே, கட்டிய மனைவிக்கும், பெற்ற குழந்தைக்கும் நல்ல துணையாய் இருந்தது, இருப்பது லட்சுமி தான்.

"அப்பேற்பட்டவனுக்கு இந்த நெலமையா?" பேருந்தில் பயணம் செல்லும் போது, மணிக்கு ஏற்பட்ட மனக் கசப்பு.

"ஹும்! நடந்துடுச்சி. இனி ஆவுரதப் பாக்கணும்", என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஜூனியர் விகடனில் ஆழ்ந்துவிட்டார்.

இரண்டு மணி நேரம் பேருந்தில் ஆட்டம் கண்ட இரு பிள்ளைகளும், சில நிமிடங்கள் முன்பு தான் கண் அயர்ந்தன. அதற்குள் இறங்கும் இடம் வந்துவிடவே, இருவரையும் தட்டி எழுப்பி, பையோடு சேர்த்து இறக்கிவிட்டார். தானும் இறங்கியவுடன், அருகில் இருந்த மாட்டு வண்டிக் காரரிடம், கணபதி தெரு முனையில் இறக்கி விடும்படி கேட்டுக் கொண்டார். சிறிய கிராமம் என்பதால், அவருக்கு விவரம் தெரிந்திருந்தது. மூவரையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது மாடு.அதைப் பார்த்து,

"அப்பா இந்த மாடு எவ்வளவு கறக்கும்?" என்று சிரித்தான் இளவரசன். அவனுக்கு காளை மாடு பால் கறக்காது என்பது தெரியும் என்று மணிக்கு தெரியும்.

"கிண்டல் செய்வதை இத்தோடு நிறுத்திக்கோ. அங்க வந்து சோகமா மூஞ்சிய வெச்சுக்கோ", என்று அதட்டினார்.

சில நிமிடங்கள் பள்ளங்கள் தாண்டுவதில் கடந்தது. கணபதி தெருவை நெருங்கும் போதே,தாரைச் சத்தமும், கூட்டக் கதறலும் காதைக் குடைந்தது. காரணம் இல்லாத படபடப்பும், பயமும், அந்த சூழ்நிலையின் அசௌகர்யத்தை இளவரசனுக்குப் புரிய வைத்தது. எல்லோரும் அழுது கொண்டிருந்த வீட்டின் முன்பு போய் மணி நின்றார்.

அவரைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கதறினார் லட்சுமி நாராயணன். தான் பெற்ற மகாராஜனைப் பார்த்ததும் இழுத்து அணைத்து, மேஜையின் மேல் வைத்திருந்த அசோக்கின் உடலைக் காட்டி,

"பாரு டா. சாவுக்கு தான் வரணும்-னு இருக்கு! அசோக்கப் பாருடா", என்று அழுதாள் பத்மா. முதல் முறையாக ஒரு பிணத்தை பார்ப்பதால், சிரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அப்படியே நின்றனர். அதுவரை தொட்டுக் கூடப் பார்க்காத தேவி, தன்னை கட்டி இறுக்குவதை பார்த்ததும், சங்கட வலைக்குள் இளவரசன் விழுந்தான். பயத்தில் இரு பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அழாதீங்க மச்சா! நடந்தது நடந்திருச்சு. இந்த பாழாப் போன வாழ்க்கைய இந்த மகராசன் அனுபவிக்க வேண்டாம்-னு தான் இவன சொர்கத்துக்கு அனுப்பிட்டாரு முனிய சாமி. மனச தேத்திக்குங்க. தேவிக்கும், கெழவிக்கும் உங்கள விட்டா யாரு இருக்கா சொல்லுங்க", தன் தோளை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்த லட்சிமி நாராயணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் மணி.

இறப்பிலும், பிறப்பிலும் ஒரு ஒற்றுமை காணலாம். ஒருவர் பிறந்த பின் கடக்கும் நேரமும், இறந்த பின் சுருங்கும் மணித்துளிகளும், நகரும் வேகத்தை எவரேனும் சொன்னால் தான் உணர முடியும். அப்படித் தன் நடந்தது அந்த இடத்திலும். சொந்தமும் பந்தமும் வந்து சேருவதற்குள், நேரம் மதியம் ஒன்றைத் தாண்டிவிட்டது. எப்போதும் போல, திடமனதுக் காரர் ஒருவர், ஏற்பாடுகளை முடித்துவிட்டு,

"நேரம் கடத்தக் கூடாது. எடுத்துரலாம்", என்றார். உடனே அடங்கியிருந்த அழுகை வலுத்தது. மயங்கிய நிலையில் இருந்த தேவி, குழந்தையை பிரிய மனமில்லாமல் துடித்தாள். அவளை பிடித்து ஒரு இடத்தில் அமிழ்த்திப் பிடித்தனர், உடன் இருந்த பெண்கள். சக்தியில்லாமல் அழுதுகொண்டே, சட்டியை பிடித்துக் கொண்டு, பிணத்தின் முன்னால், பின்னால் பார்க்காமல் நடந்தார் லட்சுமி. அவரைப் பின் தொடர்ந்தார் மணி; பிணத்தின் ஒரு காலைப் பிடித்தபடி. உடன் வரும் மக்களில் ஒருவர்,

"போன சென்மத்துல என்ன புண்ணியம் செஞ்சானோ! கஷ்டப் படாமலே பொணந்தூக்க நாலு பெற சம்பாதிச்சிட்டான். இனி அடுத்த ஜென்மமே உனக்கு கெடையாது டா. நிம்மதியா தூங்கு டா", என்று சொல்லிக் கொண்டே வர, லட்சுமியின் ழுகை சற்று குறைந்து காணப் பட்டது. மகனுக்கு செய்யவேண்டிய கடனை எல்லாம் செய்யும் வரை, தன் துக்கத்தை அடக்கி வைக்கத் முயற்சி செய்தார்.

ஒரு மணி நேரச் சடங்கு முடிந்ததும், கொள்ளியிட்டு விட்டு வீடு திரும்பினர் காட்டிற்குச் சென்ற ஆண்கள். துக்கத்திலிருந்து மீண்டவர்கள் காரியப் பேச்சை தொடங்கிய போது, தன் பங்கிற்கு மூவாயிரம் கொடுக்க ஒப்புக் கொண்டார் மணி. முன்பணமாக தான் கொண்டு வந்த உண்டியல் காசை விரித்த துண்டினுள் காணிக்கை இட்டார். பணம் சேகரித்த ஒருவர், படிப்பறிவில்லா கிழவரானாலும்,

"போடுய்யா போடுய்யா! உண்டியல் காசானாலும், சாவுன்னு வந்துட்டா அந்த முனிய சாமி கோச்சுக்காதுயா", என்று பகுத்தறிந்து பேசினார். முடிவில் காரியத்திற்கு நிதி அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.

அன்று இரவு தூங்கியவர்கள் எல்லாம்,பிஞ்சு குழந்தைகளும், பழுத்த முதியோரும் தான். அழுது அழுது கண்கள் பூத்த தேவியை, தன் மடியில் கிடத்தி தட்டிக் கொண்டிருந்தாள் பத்மா. மச்சானிடம் மற்ற விடயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் மணி. இப்படிக் கழிந்த இரவு, இரண்டு மணிக்கு திடீர் என்று பரபரப்பானது.

(தொடரும்)

0 comments: