Pages

Wednesday, August 13, 2014

பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும்- குழம்பும் சமூகம்

என் கருத்துக் கருவிழிகளுக்குள் வழுக்கி விழுந்த முக்கியமான ஒரு தலைப்பு இது. உடனடித் தெளிவு தேவைப்படும் ஒரு தலைப்பு.

 பெண்களின் பாதுகாப்போடு முட்டி மோதும் சுதந்திரம்!

நம் பெண்களுக்கு சுதந்திரம் முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?

நம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர் உண்மையான ஆணா?

இல்லை பாதுகாப்பு அளிப்பவர்
உண்மையான ஆணா?

இந்த இரு கேள்விகளும் தவறு.

பெண்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கும் ஒரு சமூகத்தில், பாதுகாப்பை உறுதிப் படுத்தவது எப்படி?

இதுவே சரியான கேள்வி.

ஆம். பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் ஒரு வாய்ப்பாக அளிக்க நினைப்பது முதலில் தவறு. அதை பாதுகாப்போடு முட்டச் செய்வது மிகப் பெரிய தவறு.

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவது சமூகத்தின் கடமை. ஆனால், சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிர்ப்பொருளும் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமை.

ஒரு பெண்ணை தனியே ஓரிடத்திற்கு அனுப்பும் போது/தங்கச் செய்யும் போது அவளுடைய பாதுகாப்பு கேள்விக்குறியானால், அங்கு பெண்ணுடைய சுதந்திரத்தை அனுமதிப்பது தவறு என்பதாகக் கொள்ளப் படுகிறது; அதை அனுமதிக்கும் ஆண் தவறான முன்னுதாரணமாக கொள்ளப் படுகிறான். பெண்ணின் வாழ்வை கெடுத்தவனாக தீர்ப்பளிக்கப் படுகிறான்.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ஒரு தவறான அனுமானம் உள்ளது. பெண்ணுடைய சுதந்திரத்தை 'கொடுப்பது' என்பது ஆணின் கையில் உள்ளது என்பதாகக் கொண்டால் இந்தத் தீர்ப்பு சரி.

ஆனால், பெண்ணுடைய சுதந்திரம் அவளிடமே இருக்க வேண்டிய ஒன்று. அவள் ஓரிடத்தில் வாசிக்கவும், உலவவும், தனிமையை நாடவும் அவள் மட்டுமே முடிவு செய்ய முடியும். இங்கு ஆண், தனக்குரிய பாதுகாப்பில் சந்தேகம் எழும் போது, ஆபத்தை எதிர்நோக்கும் திராணி அற்ற உடலமைப்பை கொண்டிருக்கும் போது, சுதந்திரத்தை அனுபவிக்கிறான். ஆனால், பெண்ணுடைய சுதந்திரத்தை அவளிடமே விட்டுவிட, அவளுடைய உடலமைப்பை காரணம் காட்டி உதாசீனப் படுத்துகிறான்.

உண்மையில் பாதுகாப்பு எனும் வார்த்தை நிலையிலாத ஒன்று. ஒருவரின் பாதுகாப்பு, அவருடைய சக்தியைக் காட்டிலும் வீரியமுள்ள மற்றொரு சக்தியை எதிர்நோக்கும் வரையில் மட்டுமே சாத்தியப் படும் ஒன்று. இதில் ஆண் பெண் பேதமில்லை. மிகப் பெரிய அரசாட்சிகள் கவிழ்வதற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

இவ்வாறு இருக்கையில், ஒரு பெண்ணை, அவளுடைய வலுவில்லாத உடலின் தன்மையை முன்னிறுத்தி ஒடுங்கிக் கிடக்கச் செய்வது, ஒரு வகையில் அவளுடைய நன்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி, ஆணாதிக்கத்தை செலுத்துவதே ஆகும்.

இதை விட, எதிர்நோக்க விருக்கும் ஆபத்தை சமாளிக்கும் தைரியத்தை பெண்ணிற்கு அளிப்பதே சிறந்த ஆணின் செயலாகக் கொள்ள வேண்டும்.

Sunday, August 3, 2014

மழைக்கு உண்டோ ஒதுங்க ஓர் இடம்?

மழைக் காலம். எப்போதும் போல ஏழைகளுக்கு இது வேண்டிய-வேண்டாத காலம். ஏழைகள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் தான் மழையின் நிஜமான சீற்றத்தை எதிர் நோக்குபவர்கள்.

வெளியே வந்து தொழில் செய்பவர்கள், விவசாயிகள், என்று அனைத்து தரப்பு ஏழைகளுக்கும் மழை நன்மையையும் செய்கிறது; கெடுதலும் செய்கிறது.

இதில் தப்பிப் பிழைத்துக் கொள்பவர்கள் பணம் படைத்தவர்கள். எப்போதும் போல மேல்தட்டு இரண்டு பர்சன்ட்.

அவர்களுக்காகவே உருவாகும் நகரங்களின் முன்னேற்றத்தை ஸ்லோ மோஷன் கேமராவை கண்ணில் பொருத்தியது போல மெதுவாக, நிதானமாக, எதிர்கேள்வி கேட்காமல் நாம் தினமும் காண்கிறோம். எது வேண்டுமானாலும் தன்னைத் தேடி வர வழைக்கும் திமிர் பிடித்த நகரங்களாக இவை உருவாகிக் கொண்டிருக்கின்றன. மனிதனின் ஆசைகளில் ஒன்றைக் கூட விட்டு வைப்பதில்லை இந்த சோ கால்ட் சொர்க்க பூமிகள். ஒரு புதிய மாடல் செல் போன் அறிமுகமானால் முண்டி அடித்துக் கொண்டு ஃப்லிப் கார்ட்-ல் குவியும் இணைய விட்டில் பூச்சிகளைப் போல தன்னைத் தேடி வந்து நுகர இந்நகரங்கள் மனிதர்களை சுண்டி இழுக்கின்றன.

இது எங்கு செல்லும் என்று அறிந்த உலகம் ஒன்று உண்டு. அந்த உலகமும் நகரத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த உலகம் பல நல்ல விஷயங்களைச் செய்கிறது. அதுவும் நகர வாசிகளின் நன்மையையே கருத்தில் கொள்கிறது. நகரமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் தேவைப்படும் நகரம், சென்ற நூற்றாண்டின் தேசிய நெடுஞ்சாலை மரங்களின் திடத்தோடு நக்கலாக சிரித்து வளர்கிறது.

என்னுடைய பரமபதத்தை பொதுத் தளத்திடம் கொண்டு சேர்க்கவும் நான் நகரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. நேரத்தை மிச்சம் பிடிக்க, மொப்பெட்-ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினேன். என் வசிப்பிடமும் நகரமயமாதலின் பிடியில் மெதுவாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாக பல உயர்ரக வியாபார ஸ்தலங்களையும், வாகனங்களையும், உடையலங்காரங்களையும், மாறி வரும் வானிலையும் கண்டேன்.

நகரத்தை நெருங்க, நெருங்க வீசிக் கொண்டிருந்த காற்று கூட குளிர்ச்சியை விட்டு சூட்டை உறுஞ்சிக் கொண்டது. ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு விமான நிலையம் அருகில் மழைத்துளிகள் என் ஹெல்மெட்-ஐ நனைக்கத் தொடங்கின.

இந்தக் காலத்தில் மழை விட்டு விட்டுப் பெய்வது மட்டுமல்லாமல் ஒரே தெருவின் தொடக்கத்திலும், முடிவிலும் கூட பாரபட்சம் காண்பித்துப் பெய்கிறது என்று தோன்றியது. எது வரை போக முடியுமோ அது வரை பயணத்தை நீட்டலாம் என்று மெதுவாக முன்னேறினேன். மழைத்துளிகளின் சட, சட சத்தத்துடன் என் வாகனம் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் தள்ளாடியது. என்னைத் தாண்டி அசுர வேகத்தில் நீரை பீய்ச்சி அடித்தபடி பணக்கார வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன.

என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முயலவில்லை. ஒதுங்க இடம் தேடிக் கொண்டே இருந்தேன்.

ஒரு பீட்சா கார்னர் போனது, ஹுண்டாய் ஷோரூம் வந்தது, பிறகு ஒரு கம்பெனி, நகை மாளிகை, ஐ கேர் ஹாஸ்பிடல்...இப்படியாக பெரிய பெரிய கட்டிடங்கள்; பார்கிங் ஓடு கூடிய விஸ்தாலமான இடங்கள்.

ஆனால் எனக்கு ஒதுங்க ஓர் இடம் கிடைக்கவில்லை. நான் தனி ஆள் அல்ல. என்னோடு இடம் தேடியவர்களில், இளைஞர்கள், ஒரு முசுலிம் தம்பதி, முக மூடிக் காதலர்கள் (அ) சகோதர சகோதிரிகள் ஆகியோரும் அடக்கம்.

பின் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நனைத்த பிறகு ஒரு பரோட்டா கடையின் வாசலில் நிற்க இடம் கிடைத்தது. நாங்கள் எல்லோரும் அந்த சிறிய இடத்திற்குள் நனைந்தபடி நின்று கொண்டிருக்கும் போது ஒரு நாய் ஓடி வந்து இடம் தேடியது.

பொதுவாக அந்த இடங்களில் உண்ணத் தயாராக இல்லாதவர்கள் இன்று அங்கு மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள். பொதுவாக நாயைத் துரத்த நினைப்பவர்கள் இன்று இடம் கொடுத்தார்கள். ஆனால், பொதுவாக அடிவாங்கியே பழக்கப் பட்ட அந்த நாய் அவர்கள் கொடுத்த இடத்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு மானம் கெட்ட நாயாகத் தெறியவில்லை. எங்களைத் தாண்டிச் சென்று விட்டது.

எங்களை எதிரில் இருந்த ஒரு கார் ஷோரூம் காவலாளி கண்ணாடி கதவிற்குப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் அங்கு வேலை செய்கிறான். இல்லை என்றால் அவனும் எங்களோடு நின்றிருப்பான் என்றே தோன்றியது.

யோசித்தேன். மழைக்கு உண்டோ இந்தச் சொர்க்க பூமியில் ஓர் இடம்? நேற்று வேலை நிமித்தமாக ஒரு கிராமத்தில் மாட்டிக் கொண்டேன். மதிய சாப்பாடே ஒரு வீட்டின் திண்ணையில் தான் முடிந்தது. இடம் ரொம்பவே குறைவு தான். ஆனால் மனம் சற்று பெரியது.

Friday, August 1, 2014

பிணம் தின்னும் வேலை


பிறப்பை கொண்டாடுவதும், இறப்பை எண்ணி வேதனை படுவதும் மனித சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து வழக்கமான செயல். உணவை உட்கொள்வது, குளிப்பது, பல் துலக்குவது போன்ற செயல்கள் நம் வாழ்வோடு பிணைந்த ஒன்றாக இருந்தது.



இன்று, உண்பதற்கென்று நேரம் ஒதுக்குவதும், உணவை பொறுமையாக மென்று தின்பதும் நல்ல வேலைக்காரர்களின் செயல் அல்ல என்று நினைக்கும் காலமாகிவிட்டது. உணவை வேலை செய்யும் மேஜைக்கு கொண்டு வருவது, உண்டபடியே வேலையைத் தொடர்வது, நாகரிகத்தின், அக்கறை மிகுந்த வேலையாளின் அடையாளமாகிவிட்டது.

இவ்வாறு நம் பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக தின்று தீர்க்கும் வேலை, பிணத்தை தூக்கிப் போடுவதற்கு கூட நேரத்தை ஒதுக்க மறுக்கிறது. இதை வேறு மாதிரி சொல்லப் போனால், வேலையிலேயே மூழ்கிவிடும் இக்கால பண முதலைகள், இறப்புக்கு நேரம் ஒதுக்குவதை வேண்டாத காரியம் போல் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

திருமணத்திற்குப் போகவில்லை என்றாலும் இறப்புக்கு போய் விட வேண்டும் என்பார்கள். ஆனால், இன்று திருமணத்திற்கும் நேரம் இல்லை. இறப்புக்கும் நேரம் இல்லை.

இறப்பு நிகழ்ந்துள்ள இடத்தில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும். அழுகை, ஓலம், நினைத்த நேரத்திற்கு கிளம்ப முடியாமை, முகத்தை எந்நேரமும் சோகமாகவே வைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை, விசாரிக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் சம்பிரதாயமாக பேச வேண்டிய நிர்பந்தம், சில நேரங்களில் நெருக்கமானவர்களாக இருக்கும் போது அழுகையே வராமல் அழ வேண்டிய கட்டாயம்.

ஆனால், இவற்றை முன்னிறுத்தி தேவையான நேரத்தில் ஆஜராகாமல் போவது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை பலர் அறிவதில்லை.

எதற்கெடுத்தாலும் வேலையை காரணமாகச் சொல்வது. தூங்கவில்லை என்றால், வேலை; சாப்பிட நேரம் இல்லை என்றால் வேலை; திருமணம் செய்து கொள்ள ஏன் இவ்வளவு நாள் என்றால், வேலை; குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது தானே என்றாலும் வேலை; சம்பாதிக்க வேண்டும்.

இதே தவறை நானும் ஒரு காலத்தில் செய்திருக்கிறேன். என்னுடைய வேலை நிமித்தமாக ஒரு தேர்வு எழுத வேண்டியிருந்தது. அதன் தேதி அறிவிக்கப் படாததால் படுக்கையில் கிடந்த நெருக்கமான உறவு என்னை முடிவாக ஒரு முறை பார்க்கப் பிரியப் பட்ட போது நான் போகவில்லை. பிறகு அந்தத் தேர்வு, அந்த உறவை இழந்த ஆறாவது மாதத்தின் ஒரு தேதியில் தான் நடந்தது. அதை ஈடு கட்ட மற்றொரு உறவின் படுக்கை நாட்களில் நான் துணையாக எல்லா உதவிகளையும் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

இன்று நான் திருமணத்தையும் விடுவதில்லை. இறப்பையும் விடுவதில்லை. நாம் எல்லாம் முதலில் மனிதர்கள். சக மனிதர்கள் பிரியும் போது விடை கொடுக்க வேண்டியது நம் கடமை. துக்கம் இருந்தாலும், இல்லை என்றாலும், நாம் அங்கிருப்பது முக்கியம். இறப்புக்குப் போக முடியவில்லை என்றாலும்  குறைந்தபட்சம் சடங்கிற்காவது போகவேண்டும்.