Pages

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Tuesday, July 22, 2014

கூந்தப்பனை : சிந்தனா சக்தியில் உலகத்தரம்



சில நாட்கள் முன்பு சு.வேணுகோபால் எழுதிய கூந்தப்பனை நாவலை படிக்க நேர்ந்தது. என் நாவலை வேண்டாம் என்று கூறிய ஒருவர் பரிந்துரைத்த நாவல் இது. உடுமலையில் ஆர்டர் செய்து வாங்கிப் படித்தேன்.

உலகத்தரம், உலகத்தரம் என்று கூறுவார்கள். அந்த உலகத்தரத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட கதை கூந்தப்பனை.

கண்ணிகள், வேதாளம் ஒளிந்திருக்கும், அபாயச் சங்கு, கூந்தப்பனை என்று நான்கு குறுநாவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம்.

ஒரு விவசாயியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்கும் கண்ணிகள், கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் மனஸ்தாபம் மற்றும் அவர்களின் இருவரின் கண்ணோட்டங்களை சொல்லும் வேதாளம் ஒளிந்திருக்கும், வேலையில்லாத ஒருவனின் விரக்திகளைச் சொல்லும் அபாயச் சங்கு முடிவில், ஆண்மையில்லாத ஒரு அப்பாவி ஆடவனின் கதையைச் சொல்லும் கூந்தப்பனை.

பொதுவாக உலகத்தரம் என்றாலே மேற்கத்திய மாயை கொண்டவர்கள், அதிநவீன விமானங்களின் இடி முழக்கத்தையும், அழுக்குப் படாத நீல நிற கட்டிடங்களை மட்டுமே கற்பனை செய்வார்கள். கூந்தப்பனை, யதார்த்தத்தை சொல்லும் சிந்தனா சக்தியில் உலகத்தரத்தை மிஞ்சியிருக்கிறது.

முக்கியமாக கூந்தப்பனையில் என்னை கவர்ந்து எழுது வைத்த பகுதியை இங்கு குறிப்பிட நினைக்கிறேன்.

தனக்கு ஆண்மையில்லை என்று திருமணத்திற்குப் பிறகு அறிந்து கொண்ட கணவன், மனைவியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்காமல் தன்னுடைய நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். முதலில் ஒப்புக்கொள்ளாத மனைவி, பிறகு நீங்களும் எங்களோடு தங்கினால் ஒப்புக் கொள்கிறேன் என்கிறாள். இந்த இடத்திலேயே சமுதாய எல்லைக் கோடுகளை தாண்டிவிட்டது கூந்தப்பனை.

மேலும்,  ஒரு புதிய தம்பதியினரின் படுக்கையறைக்கு அருகில் உறங்க நினைக்கும் ஆண்மை இல்லாத ஆடவனின் எண்ணச் சிதறல்களை ஆசிரியர் விவரிக்கும் ஒரு பத்தி, உலகத்தரங்களை வீசி எரிந்துவிட்டது.

தன்னால் முடியாத ஒன்றைத் தன் நண்பன் தரும் போது, தன்னுடைய முன்னாள் மனைவி எவ்வாறு மகிழ்ச்சி அடைகிறாள் என்று பார்க்கத் துடிக்கிறான் அந்த ஆடவன். அவ்விருவரையும் அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட விழைகிறான்.

சமூக நீதிகளால் அசிங்கத்திற்கு உள்ளாகும் இது போன்ற 'உண்மையான' எண்ணங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு எடுத்துக் கூறும் தைரியம் படைத்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

Saturday, August 10, 2013

முன்னேற்றம் கேட்கும் விலை

ரயில்வே, S & T பயிற்சிப் பள்ளியின் FOUNDERS DAY விழாவில், நான் வாசித்து பரிசு பெற்ற கவிதை..

வணக்கம். நான் இங்கு வாசிக்கப் போகும் கவிதையின் தலைப்பு 'முன்னேற்றம் கேட்கும் விலை' என்பதாகும். பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிந்தைய இந்தியாவில், இது வரை 1, 30, 000 ற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் கருத்துக் கணிப்பு சொல்கிறது. என் கவிதையின் சிறப்பென்னவென்றால், வசன நடைப் பாடலின் வழியே ஓர் விவசாயியின் கதையை சொல்லப் போகிறேன். கவனம் செலுத்தி செவி சாய்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

                                                                                                             
படிப்பறிவில்லா பாண்டிப்புறம் என்னும் ஊரில்,
பட்டதாரியாகும் ஆசை ஒருத்தனுக்கு உதித்தது.
அதற்கொரு காரணமும் இருந்தது.

வயதான விவசாயியாம் அவன் தந்தை,
அனுதினமும், வெயிர்சூட்டால் வதைக்கப்பட்டு,
வியர்வை சிந்தி உழைப்பார்.

ஆனால், அடிப்படையில் வாய்க்க வேண்டிய
வசதிகளில் ஒன்று கூட,
அவர் வாழ்வில் எட்டிப் பார்க்க மாட்டேன் என்றது.

இந்நிலை தன்னோடு முற்றுப்பெற வேண்டுமே
என்ற வேட்கை தான், பிள்ளையின் மனதில்
அறிவுச் சூடேற்றி, தனல் சேர்க்க வழி செய்தது.

பத்தாம் வகுப்பில் முதலாக நின்றான்.
அடுத்த இரு ஆண்டுகளில் மாநிலத்தில்
சாதனை படைத்தான்.

மென்பொருள் நிறுவனம் ஒன்று
தட்டில் பூ வைத்து,
வலிந்து வேலை கொடுத்தது.

பூரிப்பின் உச்சம் தொட்டு,
உச்சி நுகர்ந்தார் விவசாயத் தந்தை.

ஒயிட் காலர் ஊதியத்தோடு,
ஊர் பேர் சொல்லும் பிள்ளையாக,
சென்னைக்குள் நுழையலானான்.

சூழலால் ஈர்க்கப்பட்டு,
நகரத்தோடு ஒன்றிப் போனான்.

மூன்றே ஆண்டுகளில் திருமணம் நடந்தது.
வெளிநாடு போகும் வாய்ப்பும் அமைந்தது.

இது தானடா முன்னேற்றம் என்று
மார் தட்டும் நேரத்திலே,
தந்தையிடமிருந்து மடல் ஒன்று கிடைத்தது.

பொருளாதார மண்டலம் அமைக்க
நில ஆர்ஜிதம் செய்யும் அரசு,
முதலாளியான என்னை,
கையேந்தி நிற்க வைக்கிதே!

இந்த அவல நிலையை என்னென்று கேட்க
என்னை வந்து பார்ப்பாயா?
வயல் வெளிகளை காப்பாயா?

தந்தையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும்
அழுகையோலமாக பிள்ளையின்
காதுகளை குடையவே,
உடனடியாகக் கிளம்பித் தாயகம் திரும்பினான்.

அதிகாரிகளின் கால் பிடித்தான்.
விவசாயத் தொழிலையேனும் விட்டுவையுங்கள்
என்று கெஞ்சிப் பார்த்தான்.
 நிலைமை பிடி கொடுத்துப் பேச மறுத்தது.

முடிவில், மனதை தேற்றிக் கொள்ளுங்கள்;
என்னோடு வந்து செருங்களென்று
தந்தையையும் உடனழைத்துச் சென்றான்.

இரண்டு மாதங்களில் கழித்து,
வெளி நாடு புளித்துப் போகவே,
தாயகம் திரும்பினார்,
அப்பாவி விவசாயத் தந்தை.

தனிமை அவரை வாட்டி வதைத்தது..
சேற்றில் கால் வைக்க தேகம் முழுவதும்
துடி துடித்தது.

வயலைத் தேடி நடந்து சென்றார்.
அங்கே,
ஜேசிபி எந்திரம் ஒன்று, மண் புழுவை,
துண்டு துண்டாக வெட்டக் கண்டார்!

துடி துடித்து நெளிந்த விவசாய நண்பனின் இறப்பு
அவரை தூங்க விடாமல் புரள வைத்தது.
வேலையில் மும்முரமாகும் முன்,
தன் பிள்ளைக்கு தகவலனுப்பினார்.

இம்முறை மடல் மடலெல்லாம் எழுதவில்லை.
என் தற்கொலையின் விவரம் சொல்லும்,
ஒரு வரித் தந்தியே போதும் என்றார்!

Sunday, June 2, 2013

கவிதை: கருமை


கருமையை சிறப்பிக்க நம் கவிஞர்கள் 
கற்பித்த உவமைகள் பற்பல..
அடை மழை யெனத் தம் பிரஜைகட்கு 
அள்ளி வழங்கிய வள்ளல் கோமான்களை
கார்மேகத்தொடு ஒப்பிட்டார் ஒருவர்;

மாந்தர் குலத்திற்கு குவி மையமாய் விளங்கும்               
மங்கையர் கருவிழியை மீன் விழியென
வர்ணித்தார் இன்னொருவர்.

அவள் கருங் கூந்தலின் நறுமணத்திற்கு 
காரணம் அறியாமல், ‘சொக்கா’ ‘சொக்கா’ என்று 
அலைந்தவர் கதையை அறியாதவர் உண்டா?

அல்லது
தம் முன்னோரின் பசி தீர்க்க, 
காக்கைக்குச் சொறிட்டு,
புண்ணியம் தேடாதவர் தான்
இப்புவியில் உண்டா?

இங்ஙனம்,
கருமையின் பெருமையைச் சொல்ல
எத்தனை கதைகள் இருந்தும்,
மனித மனம் குரங்கென்பதற் கேற்ப 
தவறாமல் தலை கீழென இயங்கினோம் நாம்!

உடலியக்க உறுதிக்கு உணவிட்டு ஊட்டி வளர்க்கும் 
உன்னதப் படைப்பாளியின் மகிமையை உணராமல்
நித்தமும் அவரை நிந்தனை செய்தோம்.
தூய மனம் கொண்டவர் துன்பத்தால் துவண்டாலும்
துர்நாற்றம் பிடிக்காமல் தூரச் சென்றோம்!

விஷ வாயுவை உள்வாங்கி
வியாதியுடன் சரசம் பாடும்,
சாக்கடைத் தொழிலாளியின் நிலை தான் என்ன?
சூத்திரன், அரிசனன் என்று கண்டதையும்
கேட்டுக் கேட்டு அவர் காதுகள்
புழுத்தது தான் மிச்சம்!

இத்தகைய வன்முறையை அரங்கேற்றும்
நம் வெள்ளை நிறமா சமாதானத்தை குறிக்கும் சின்னம்?

கரை படிந்த சிந்தையதை
இக்காரிருள் கடப்பதற்குள் களைந்தெடுத்து
சலவை செய்ய வாருங்கள்!

வேற்றுமையை வேரறுக்கும்
தொழமைக்குத் தோள் கொடுக்க,
நம் கைகளை உயர்த்திடுவோம் வாருங்கள்!

இக்கவிதை, தென்னக ரயில்வே, சிக்னல் பயிற்சிக் கூடத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் வாசிக்கப் பட்டு, பரிசும் பெற்றது.

எண்ணம்-எழுத்து,
கண்ணன் ராமசாமி



Monday, December 10, 2012

லைஃப் ஆஃப் பை விமர்சனம்


                                                                                                       

டிசம்பர் ஒன்பதன்று அபிராமி ரோபோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். இது Cast Away மாதிரி இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும் இந்தியாவில், அதிலும் பாண்டிச்சேரியில் எடுத்த படம் என்பதால் போய் பார்த்தேன். அந்த நினைப்பு பொய் என்று தெரிந்தது. இது ஒரு மனிதனுக்கும், விலங்குமான தொடர்பு சம்மந்தப் பட்ட படம்.


எங்கள் வீட்டில் ஓர் நாட்டு நாய் உள்ளது. நாயுக்கும் எனக்குமான தொடர்பு மனிதத் தொடர்பை விட மேலானது. நான் என்ன பேசுகிறேன் என்று அதற்குப் புரியும். அது என்ன சொல்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியும். ஆச்சர்யப் படும் விஷயம் என்னவென்றால், நான் தினமும் குளித்து, புதிய ஆடை அணியும் போது, என்னை நுகர்ந்து பார்த்து வாலாட்டும். தினமும் காலையில் என் மேல் கால் வைத்து எழுப்பும். 

அதே நேரம், இரண்டு முறை கடித்திருக்கிறது. முதல் முறை கடித்த போது அது சிறிய குட்டி. என்னை விளையாட அழைக்கும் நோக்கில் தொடையில் வாயை வைத்தது. புதிதாக வளர்ந்த கூர்மையான பல் அறியாமலே உள்ளே இறங்கி விட்டது. இரண்டாவது முறை கடித்த போது மூன்று வயது. அதனுடைய காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தேன். வலி தாங்காமல் கவ்வியது. பல முறை விளையாடும் போது தெரியாமல் நகம் படும். ஆனால் ஒரு முறை கூட என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு எதையும் செய்ததில்லை. எதிர்ப்பை தெரிவிக்க வாயைத் திறந்தாலும், பற்களை உள்ளே செலுத்தியதில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், படத்தின் நாயகன், அவன் அப்பா நடத்தி வந்த சூவை(zoo) மூடிவிட்டு கனடாவுக்கு விலங்குகளை எடுத்துச் செல்லும் போது தனியாக மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து ஓர் சிறிய படகில் ஏறிக் கொள்கிறான். அப்பா, அம்மா, சகோதரன் எல்லோரும் மூழ்கி விடுகிறார்கள். நான்கு மிருகங்கள் மட்டும் தப்பிக்கின்றன. அவை இவனுடைய படகில் ஏறிக் கொள்கின்றன. அந்த நாயகன், எப்படி ஒரு பெங்கால் புலியுடன் பயணித்து கடலில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் கதை. புலியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள்.


புலியும் நாயும் ஒன்றல்ல. ஆனால் புலியுடைய பல்வேறு செய்கைகளை நான் என் நாயிடம் பார்த்திருக்கிறேன். கம்பை எடுத்தால் ஒரு காலால் அதை தடுப்பது, சோம்பல் முறிப்பது, உட்காருவது இது எல்லாமே தத்ரூபமாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஒரு தமிழ் பாடல்! விலங்குகளை காண்பிக்கும் போது பின்னணியில் அந்த இசை காதுக்கு இனிமையாக இருந்தது. ஒரு ஓரங்குடன் குரங்கின் தாய்ப் பாசத்தை காட்டியது, நரியை சமாளிக்க முடியாமல் அந்த குரங்கும் ஜீப்ராவும் இறப்பது மனதை கனக்கச் செய்தது. வில்லனாக சித்தரிக்கப் பட்டுள்ள அந்த நரியை வேட்டை ஆட ‘come on’ என்று நாயகன் சொல்லும் போது, நரியை கொல்ல புலி பாய்ந்து வந்தது தான் படத்தின் ஹை லைட்! அந்த புலிக்கு அது ஒரு ‘introduction scene’ என்றே சொல்லலாம்.

பசிக்காத வரை தான் மிருகம் நல்லபடியாக இருக்கும் என்று யதார்த்தத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது உண்மை தான். அதே நேரம், மனிதனும், மிருகமும் மனதளவில் இணக்கமாக வாழ வழி உள்ளது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.

படம் முழுவதும் உள்ளோட்டமாக கடவுள் நம்பிக்கை வருகிறது. நாயகன், இந்தியாவின் முக்கிய மூன்று மதங்களை ஒரே நேரத்தில் பழகுகிறான். கடலில் தத்தளிக்கும் போது கடவுள் நம்பிக்கை அவனுக்கு உதவுகிறது. முடிவில், கப்பல் ஏன் மூழ்கியது என்று கேட்டு வரும் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன் கதையை சொல்கிறான். ஆனால் அவர்கள் ஒரு தவறை கண்டு பிடித்து அந்தக் கதையை நம்ப மறுக்கிறார்கள். அதனால்,
மிருகங்களுக்கு பதில் மனிதர்களை கதாபாத்திரங்களாக மாற்றி அதே கதையை வேறு விதமாக சொல்கிறான். இரண்டில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று கதை கேட்கும் நம்மிடம்(நம் பிரதிநிதியாக படத்தில் ஒருவர் இருக்கிறார்) கேட்கிறான். நம்மைப் போலவே அவரும் டைகர் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறார். அப்படியானால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள் என்று சொல்கிறான்.


ஒரு தீவில் பகல் முழவதும் நிம்மதியாக வாழும் உயிரினங்களுக்கு இரவில் அத்தீவே எதிரியாகிறது. அங்கு உள்ள நீரில் ஒருவகையான ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதை என்னால் நிரூபிக்க முடியவில்லை. ஓரங்குடன் குரங்கு கடலில் மிதக்கிறது என்று நான் சொன்னேன். அதை அவர்கள் நம்பவில்லை. ஆனால் இதெல்லாம் உண்மை. நான் பார்த்தேன்- என்று கூறி கடவுள் நம்பிக்கையை நியாயப் படுத்துகிறான்.

இந்த வாதத்திற்கு கண்டிப்பாக விஞ்ஞானத்திடம் பதில் உள்ளது. ஆனால் உணர்வு சம்மந்தமான படத்தில் அந்தக் கேள்விகள் தேவை அற்றவை. ஒரு நம்பிக்கை நன்மை செய்தவரையில் நாம் எந்த கேள்வியை எழுப்பப் போவதில்லை. எம்மதமும் சம்மதம் என்று நினைக்கும் ஒருவனிடம் கடவுள் நம்பிக்கை இருந்து விட்டுத் தான் போகட்டுமே!   

Sunday, December 9, 2012

DTH தொழில் நுட்பம் பற்றி கமலின் பேச்சு!



DTH ஒரு புதிய பரிணாமம்:

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும்கூட உலக வழக்கம்.

உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம் மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.

ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்… உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்க வைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.

ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.
இந்த DTH என்பது என்ன? எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.

சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH. இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று. என் படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு வி.ரூ வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?
DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தியேகக் காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.

விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

DTH வசதி தமிழக ஜனத்தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.

7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரி கொண்டு போவதைத் தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள DVDக் காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.

இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம் கெடும் என்று எதிர்த்துத் தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது. பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ள ஒரு பக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை. கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திர்கும் வீட்டில் மின் விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?

முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

-கமல் ஹாசன்

Sunday, May 27, 2012

தன்யாவின் பகிர்வும், தமிழக மக்களின் எதிர்ப்பும்


இராக் மீது எண்ணைக்காக அமெரிக்கா தொடுத்த போரைதீவிரவாத தடுப்புப் போர்” என்று பொய் சொன்னது அமெரிக்க அரசு. அதை அம்மக்களும் நம்பினார்.Britney spears என்ற புகழ் பெற்றப் இசைக் கலைஞரிடம் இது பற்றிக் கேட்ட போது நாம் நம்முடைய President - நம்ப வேண்டும் என்றார். அரசின் சூழ்ச்சியை மக்கள் எவ்வளவு கண்மூடித் தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இங்கு நம் பக்கத்து மாநிலமான கர்நாடக நமக்கு தண்ணீர் தர மறுக்கிறது. நம் உரிமையை நாம் பெறுவதற்குப் போராடினால் அதை பிச்சை என்ற வகையில் சித்தரிக்கிறது கர்நாடக அரசு. இதையும் அம்மக்கள் நம்பி நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வில்லாமல் தமிழகத்தவரை கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் Facebook- கலக்கிய ஒரு
Controversy. தன்யா என்ற நடிகை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி Play
off சுற்றுக்குள் நுழைந்ததை அடுத்து ஒரு status போட்டுள்ளார். அதில் நாம் தண்ணீருக்காகமின்சாரத்திற்காக பிச்சை எடுப்பதாகவும், இந்த play off சுற்று வாய்ப்பையும் அப்படியே வாங்கியுள்ளதாகவும் எழுதியுள்ளார். இதை எதிர்த்து பல சென்னை வாசிகள் அக்னியை கக்கியுள்ளனர்.”We hate Dhanya” போன்ற பக்கங்களை தொடங்கி ஆபாச வார்த்தையில் திட்டி தங்கள் எதிர்ப்பை தெரவித்துள்ளனர். இதை அடுத்து தன்யாவின் அபிமானிகளும், தண்ணீர் பிரச்சனையில் தங்கள் மாநிலத்தை நம்பும் மக்களும், ‘We love dhanya’ என்ற பக்கத்தை தொடங்கி அந்த நடிகைக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க சென்னை வாசிகளை ஆபாசமாக திட்டியும், எதிர்த்தும் எழுதியுள்ளனர்.



இதையெல்லாம் எதிர்பார்க்காத தன்யா, தன்னுடைய ட்விட்டர் வலை தளத்தில் "இனி சென்னை பக்கம் வரவே மாட்டேன். தமிழக திரை உலகையும் விட்டுப் பிரிகிறேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண். சினிமாவில் பெரிதாக சாதிக்கவும் இல்லை. நண்பர்களுடன் Room எடுத்து தங்கித் தான் வாய்ப்புகளை பெற்றேன். இந்த விவகாரம் என்னையும் என் குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு எதிரான பேச்சுக்கள் உயிர்பயத்தை கொடுத்துள்ளதால் இங்கிருந்து கிளம்புகிறேன்" என்று மே 26 ஆம் தேதி சொல்லிவிட்டுக் கிளம்பினார். இதை ஒரு புரட்சிப் போராட்ட வெற்றியாக கருதிய அனைத்து எதிர்ப்பாளர்களும் "தமிழ் வாழ்க!", "தமிழன் நா சும்மாவா?" என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த நடிகை பொதுத் தளத்தில் எல்லோரையும் போல் உண்மை நிலவரங்களை அறியாமல் அந்த status எழுதியது தவறு. அதே சமயம், இந்த விவகாரத்தை ஒரு புரட்சியாக கையில் எடுத்துப் போராடிய 'தமிழ் திலகங்களை' பற்றி யோசிக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அந்த நடிகையை ஆபாசமாக திட்டி பணிய வைத்தது ஒரு வகையில் வெற்றி தான் என்றாலும், அந்த நடிகையோ, கர்நாடக மக்களோ தங்கள் தவறை உணரவில்லை. உங்கள் மனதை புண் படுத்தியதற்கு மன்னிக்கவும் என்று தான் அந்த நடிகை எழுதியுள்ளாரே தவிர, உண்மை தெரியாமல் பேசிவிட்டேன் என்று அவர் சொல்லவில்லைஅவர் பேசிய வார்த்தைகளில் உண்மை இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் எந்த பகிர்வும் எதிர்ப்பாளர்களின்  தளங்களில் இல்லை. உண்மையை அறியாத கர்நாடக மக்கள் இவர்களது எதிர்ப்புக் குரலை அடுத்து உண்மையை அறிய முற்பட்டார்களா என்றால் அதுவும் இல்லை. ஏட்டிக்குப் போட்டியாக அந்த நடிகையை ஆதரித்தனர். இதற்கும் அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கும் முயற்சியில் இப்போராளிகள் இறங்காதது முக்கிய காரணம்.

இப்போது இந்த சண்டையால் உருவான ஒரு விளைவு, இரு பக்கத்திலும் "தமிழர்கள் என்றாலே பிச்சைக் காரர்கள்" என்ற நினைப்பும், "கர்நாடகத்தவர்கள் என்றாலே நம் உரிமைகளை பறிப்பவர்கள்" என்ற நினைப்பும் வலுவாக பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. உண்மையை அறியவும், அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. இது இரு பக்கத்தில் உள்ள இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களின் மனதில் சகோதரத்துவத்தை மேலும் சீரழிக்கும் ஒரு புரட்சியாகவே முடிவுக்கு வந்துள்ளது. இனி கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தராமல் போகும் போது, "இவர்கள் செய்த காரியத்திற்கு இந்த தண்டனை கொடுக்க வேண்டியது தான்" என்ற எண்ணமே அவர்கள் மனதில் இருக்கும். தங்கள் அரசு தவறு செய்கிறது என்ற உண்மையை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது. இதுவே இந்த போராட்டத்தால் கிட்டிய வெற்றி! வாழ்க உங்கள் புரட்சி!

ஒரு மாநிலத்தின் மக்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அதற்கு சுயநலம் ஒரு முக்கிய காரணம். இதற்கு கர்நாடகமும் விதிவிலக்கல்ல. தமிழகமும் விதிவிலக்கல்ல.
 கூடங்குளம் என்ற இடம் தமிழகத்தின் உள்ளே தான் இருக்கிறது. இங்கு அணுக் கழிவுகளை ஆபத்தில்லாத முறையில் எப்படி வெளியேற்றப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு இன்று வரை புதைத்து வைப்போம் என்ற பதில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கும்  நிலையில், போராட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் முடக்கியதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த தமிழக புரட்சியாளர்கள். இதற்கு முக்கிய காரணம், அரசும், விஞ்ஞானிகளும் சொன்னதை அப்படியே நம்பும் பழக்கம் தான்.

கர்நாடகத்தைப் போல் நம் அரசு இதே தவறை செய்துவிட்டு அதற்கு ஒரு காரணம் சொன்னாலும், இந்த மக்களும் நம்பிக் கொண்டு தான் இருப்பார்கள். இன்று மின்சாரம் வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் அணுக் கழிவுகளால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை பற்றி யோசிக்கக் கூட மறுப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை


தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப் பட வேண்டும். உண்மையை பரப்பும் புரட்சியே நிரந்தத் தீர்வை கொண்டு வரும். இதை என்று இவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. தற்காலிக, கட்டாயப் பணிதல், அவர்கள் மனதினுள் புகையை கிளப்பி விடும். அது என்று வேண்டுமானாலும் நெருப்பாக மாறலாம். அப்போது இந்த புரட்சியாளர்களின் முயற்சி BACK FIRE ஆகி நம்மை
யும், கர்நாடகத்தை நம்பியிருக்கும் டெல்டா விவசாயிகளையும் அழித்தால் இந்த பக்குவமில்லா போராட்டமே அதற்கு காரணமாய் அமையும். அப்போது இறங்கி வந்து போராட்டம் நடத்தை இந்த சிகாமணிகளுக்கு நேரம் இருக்குமா?