Pages

Showing posts with label protection for women. Show all posts
Showing posts with label protection for women. Show all posts

Wednesday, August 13, 2014

பெண்களின் பாதுகாப்பும், சுதந்திரமும்- குழம்பும் சமூகம்

என் கருத்துக் கருவிழிகளுக்குள் வழுக்கி விழுந்த முக்கியமான ஒரு தலைப்பு இது. உடனடித் தெளிவு தேவைப்படும் ஒரு தலைப்பு.

 பெண்களின் பாதுகாப்போடு முட்டி மோதும் சுதந்திரம்!

நம் பெண்களுக்கு சுதந்திரம் முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?

நம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பவர் உண்மையான ஆணா?

இல்லை பாதுகாப்பு அளிப்பவர்
உண்மையான ஆணா?

இந்த இரு கேள்விகளும் தவறு.

பெண்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கும் ஒரு சமூகத்தில், பாதுகாப்பை உறுதிப் படுத்தவது எப்படி?

இதுவே சரியான கேள்வி.

ஆம். பெண்களுக்கான சுதந்திரத்தை நாம் ஒரு வாய்ப்பாக அளிக்க நினைப்பது முதலில் தவறு. அதை பாதுகாப்போடு முட்டச் செய்வது மிகப் பெரிய தவறு.

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவது சமூகத்தின் கடமை. ஆனால், சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிர்ப்பொருளும் அனுபவிக்க வேண்டிய அடிப்படை உரிமை.

ஒரு பெண்ணை தனியே ஓரிடத்திற்கு அனுப்பும் போது/தங்கச் செய்யும் போது அவளுடைய பாதுகாப்பு கேள்விக்குறியானால், அங்கு பெண்ணுடைய சுதந்திரத்தை அனுமதிப்பது தவறு என்பதாகக் கொள்ளப் படுகிறது; அதை அனுமதிக்கும் ஆண் தவறான முன்னுதாரணமாக கொள்ளப் படுகிறான். பெண்ணின் வாழ்வை கெடுத்தவனாக தீர்ப்பளிக்கப் படுகிறான்.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னால் ஒரு தவறான அனுமானம் உள்ளது. பெண்ணுடைய சுதந்திரத்தை 'கொடுப்பது' என்பது ஆணின் கையில் உள்ளது என்பதாகக் கொண்டால் இந்தத் தீர்ப்பு சரி.

ஆனால், பெண்ணுடைய சுதந்திரம் அவளிடமே இருக்க வேண்டிய ஒன்று. அவள் ஓரிடத்தில் வாசிக்கவும், உலவவும், தனிமையை நாடவும் அவள் மட்டுமே முடிவு செய்ய முடியும். இங்கு ஆண், தனக்குரிய பாதுகாப்பில் சந்தேகம் எழும் போது, ஆபத்தை எதிர்நோக்கும் திராணி அற்ற உடலமைப்பை கொண்டிருக்கும் போது, சுதந்திரத்தை அனுபவிக்கிறான். ஆனால், பெண்ணுடைய சுதந்திரத்தை அவளிடமே விட்டுவிட, அவளுடைய உடலமைப்பை காரணம் காட்டி உதாசீனப் படுத்துகிறான்.

உண்மையில் பாதுகாப்பு எனும் வார்த்தை நிலையிலாத ஒன்று. ஒருவரின் பாதுகாப்பு, அவருடைய சக்தியைக் காட்டிலும் வீரியமுள்ள மற்றொரு சக்தியை எதிர்நோக்கும் வரையில் மட்டுமே சாத்தியப் படும் ஒன்று. இதில் ஆண் பெண் பேதமில்லை. மிகப் பெரிய அரசாட்சிகள் கவிழ்வதற்கு இதுவே காரணமாக விளங்குகிறது.

இவ்வாறு இருக்கையில், ஒரு பெண்ணை, அவளுடைய வலுவில்லாத உடலின் தன்மையை முன்னிறுத்தி ஒடுங்கிக் கிடக்கச் செய்வது, ஒரு வகையில் அவளுடைய நன்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி, ஆணாதிக்கத்தை செலுத்துவதே ஆகும்.

இதை விட, எதிர்நோக்க விருக்கும் ஆபத்தை சமாளிக்கும் தைரியத்தை பெண்ணிற்கு அளிப்பதே சிறந்த ஆணின் செயலாகக் கொள்ள வேண்டும்.