Pages

Friday, October 14, 2016

யாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு!

யாவரும்.காமில்  படிக்க :

எங்கள் ஊரில் தனது திருவடிகளை பதிக்க வரும் அண்ணன் ராஜேந்திரன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கும் அன்பு நெஞ்சங்கள் என்று எழுதியிருந்த வாசகத்தின் கீழ் கை கூப்பியபடியும், கறுப்பு மூக்குக்கண்ணாடியை ஒரு கையால் பிடித்தபடியும், பாக்கெட்டில் மினிஸ்டர் ஒயிர் துணியின் பின்னால் தெரியும் ராஜேந்திரனின் புகைப்படத்தை கேமராவின் முன் காட்டியும் போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருந்த மூன்று அல்லக் கைகளின் முகத்திலும் கழுவி ஊற்றினான் ராஜேஷ்.
கடைக்கு வந்திருந்த இரண்டு வறண்ட நாக்குகளுக்கு சாத்துக்குடி ஜூசும், எலுமிச்சை சோடாவும் போட்டுக் கொடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் எச்சில் கிளாஸ்களை முக்கி எடுத்தான். மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான். ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக் கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.
வழிந்தது போக தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒரு ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.
ராஜேஷ், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தோல்வி கண்டத்தில் இருந்து அவன் அப்பாவுக்கு தான் செய்து கொண்டிருக்கும் சிறு தொழிலுக்கு கிளை அமைக்க யோசனை பிறந்துவிட்டது.
இனி இவனை படிக்க வைத்து, இருக்கும் பணத்தையும் வீணடிப்பதை விட, சிறு தள்ளு வண்டிக் கடையை வைத்துக் கொடுத்து விட்டால், ஒரு வருமானமாவது கிடைக்கும் என்று சிந்தித்தார். அவர் இப்படி யோசிக்க இதை விட முக்கியமான ஒரு காரணமும் இருந்தது.
முந்தையை நாள் அதிகாலை பழங்கள் வாங்கி வர ரயில் ஏறி வெண்டர்ஸ் பெட்டியில் உட்கார்ந்தவுடன், வேலூரில் இருந்து பால் குடங்களை ஏற்றிச் செல்லும் பல நாள் நண்பர் சேகரை சந்தித்தார். அப்போது இருவரின் ஊரிலும் நடக்கும் சிறு வியாபாரங்களைப் பற்றிய பேச்சு எழுந்தது.
வேலூரில் வெயில் அதிகம். அங்கே ஜூஸ் கடை திறக்கலாம் என்றார் சேகர்.
நீயும் தான் இதை எல்லா நேரமும் சொல்லிக் கிட்டே வர்ற. அங்கே உள்ள நிலைமை எப்படி-ன்னு தெரியலையே!
அட என்னப்பா இப்படி பயந்துக்கிட்டு! கரையை தாண்டாமலே ஆழம் எவ்வளவு இருக்கும்-னு கணக்குப் போட்டுகிட்டு இருந்தா எப்படி? துணிஞ்சு இறங்கு. கால் வைக்க கல் கிடைக்கும்
கல்லு கிடச்சா பரவாயில்லையே பா! பொத குழியில மாட்டிக்காம இருக்கணுமே. உங்க ஊர் வியாபாரிங்களோட நமக்கு ஒத்துப் போகணும். மாமூல் அது இது-ன்னு நிறைய தலை வலி இருக்கு. பால் குடம் சுமக்குற கதையில்ல இது
என் மகனும் சீசனுக்கு ஏத்தபடி வாழைப்பழம், மாதுளை, கொய்யா, வேர் கடலை, ஆரஞ்சுன்னு கூவி கூவி விக்கிறவன் தான் அப்பு! நீயாவது ஒரு இடத்துல நின்னு விக்கிறே. அவன் தினமும் ரயில் ஏறி வித்துட்டு வர்றான். எவ்வளவு பேரை பாத்திருப்பான்?
யோவ்! வண்டியில விக்கிறவனை பத்தி எனக்குத் தெரியாது? பெரும்பாலும் ஒருத்தன் வித்தான்-ன்னா இன்னொருத்தனை தொழில் கத்துக் கொடுத்து கை தூக்கி விடுவான். ஒரு ஊர் காரப் பயலுங்களுக்குள்ள என்ன சண்டை சச்சரவு வந்துடப் போகுது? நான் ஏறின பெட்டியில நீ ஏன்டா ஏறின-ன்னு கேக்குறதோட சரி என்று கிண்டலாகச் சொல்லி விட்டு, சேகரின் காதுக்கருகே சென்று,
உன் மகனுக்கு தொழில் கத்துக் கொடுத்ததும் உன் சாதிக் காரப் பய தானே? என்று சொல்லி சிரித்தார் ராஜேஷப்பா. சாதியைக் குறிப்பிட்டுப் பேசியதால் வெறுப்பாகிப் போன சேகர்,
அப்படிப் பாத்தீன்னா, பானி பூரி விக்கிற இந்திக் காரன் எல்லாம் யார் தயவால இங்கே வந்து கடை போட்டிருக்கான்?
இந்தக் கேள்வி ராஜேஷப்பாவை கொஞ்சம் புரட்டித் தான் போட்டு விட்டது. தண்டவாளத்தின் இணைப்பில் ரயில் ஏறி இறங்கும் போது ஏற்படும் அதிர்வை அவர் தன் மனதிலும் உணர்ந்தார்.
சேகர், எதைப் பத்தி வேணாலும் பேசு. அவிங்கள பத்தி மட்டும் பேசாதே சிடு சிடுவென்று எறிந்து விழுந்தார் ராஜேஷப்பா.
ஏன்? ஏன்? அவரை மடக்கி விட்ட மகிழ்ச்சியில் சேகர் பதில் அறிய அவசரப் பட்டார்.
என் பையன கெடுக்குறதே அவங்க தான். கொஞ்ச நாள்-ல ஊருக்குள்ள வந்து அவங்க பண்ற அட்டூழியம் தாங்கல
அப்படி என்ன கெடுத்துப் புட்டாங்க? பால் டின்னின் வாயில் திணித்திருந்த வைக்கோல் மூடியில் இருந்து ஒன்றை உருவி வாயில் அதக்கிச் சப்பிக் கொண்டே கேட்டார் சேகர்.
பின்ன என்னப்பா? முதல்ல ஒரு சின்ன கடையை கொண்டு வந்து விரிச்சான். சாயந்திரம் நாலு மணிக்கு கடைய போட்டான்னா இரவு பத்து, பத்தரை வரைக்கும் கூட்டம் அள்ளுது. ஸ்கூல் பசங்க, காலேஜ் பசங்க பஸ்சை விட்டு இறங்குற இடமா பாத்து விரிச்சான். இன்னைக்கு சோத்துப் பருக்கைய மோச்ச ஈயாட்டம் வதவதன்னு ஊருக்குள்ள பத்து கடைங்க அவனுக்கு. குடிச்சிட்டு பிரியாணி கடையில கூடுற கூட்டமாட்டும் இல்ல இருக்குது! வெளி ஊர்-ல இருந்து அவன் இங்கே வந்து சம்பாதிக்கிறான். எம்மகன் பழக்கத்துக்காக அவன் கடையில சேர்வா கவர் கட்டுறான். ஷேய்!!
அவனுக்கு எதுல நாட்டம் போகுதோ அதையே அவனுக்கு குடுக்க வேண்டியது தானே? நீ சொல்லுறதையே தான் நானும் சொல்றேன். பானி புரி கடைக்காரனை பாரு. இங்கே வந்து கடை விரிச்சு கல்லா கட்டினதும், அவனைப் போலவே நாலு இந்திக் காரங்களை வரவழைச்சான். ஊர்-ல முக்கியமா மக்கள் கூடுற நாலு இடத்தை புடிச்சு தள்ளு வண்டி போட்டு இப்போ கலக்ஷனுக்கு போய் சம்பாதிக்கிறான்.
இன்னைக்கு மக்களை ஏமாத்திக்கிட்டு திரியிற பாதி கம்பெனிங்க இவன் செய்றதை தானேய்யா செஞ்சுக்கிட்டு இருக்கு? உலகத்துலேயே குறைவான சம்பளத்துக்கு வேலை செய்ற ஆளுங்க நம்ம பசங்க தான்-ன்னு சரியா கண்டு புடிச்சு ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு கம்பெனியை தொறந்து விட்டானுல்ல? அவன் உன்னைய மாதிரியா யோசிச்சுக்கிட்டு இருந்தான்?
சேகர் சொன்ன வார்த்தை ராஜேஷப்பாவுக்கு சுருக்கென்று உறுத்தியது.
அப்போ என் மகன் படிப்பு?
என்ன படிக்க வெச்சு இஞ்சினியர் ஆக்கப் போறியா? ஹீ..ஹீ...இன்னைக்கி இஞ்சினியரிங் படிச்ச பாதிப் பசங்க நீ சொன்ன அந்த பானிப் பூரி கடையில அரட்டை அடிச்சுக்கிட்டு தான் இருக்கான்.
இதோ பாரு! படிப்புங்குறது ஏட்டுக் கல்வி மட்டுமில்ல. எந்த தொழிலும் கேவலமில்லை-ன்னு நினைக்காதவன் எத்தனை புஸ்தகத்தை படிச்சாலும் வீணாத் தான் போவான். இந்தியாவுல பாதிக்கு பாதி சனங்க தொழில் செஞ்சு தான் பிழைப்பை ஓட்டுறாங்க. அவங்களுக்கும் படிப்பு தேவை தான்! ஆனா சம்பாதிக்க மட்டும் இல்லை.
எனக்குத் தெரிஞ்ச ஒரு காய்கறிக் கடைக்காரன் அற்புதமா கணக்குப் போடுவான். இப்போ போடுற மாதிரி மொபைல்-ல இல்ல! மனக் கணக்கு...முக்கியமா, பிழையில்லாம! அவன் படிச்சவன் இல்லையா? நீ ஏன் உன் மகன் மத்தவங்க படிக்கிற அதே படிப்பை படிக்கணும்-ன்னு நினைக்கிறே? ஒவ்வொருத்தனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி வித்யாசமானது இல்லையா? உன் மகன் வாழ்க்கையை கத்துக்கட்டும்! அது தான் இருக்குறதுலேயே ரொம்ப கஷ்டமான கல்வி
சேகர் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தோன்றியது ராஜேஷப்பாவிற்கு. அவர் பேச்சு கொடுத்த தைரியத்தில் வட்டிக்கு பணம் பெற்று ஒரு தள்ளு வண்டிக் கடையை கட்டித் தர முடிவெடுத்தார். அவருடைய நண்பரான சைக்கிள் கடை பாய் இந்த வேலையில் கை தேர்ந்தவர்.
விஷயம் கேள்விப் பட்ட பாய் ராஜேஷப்பாவுக்கு உதவ முன்வந்து, செலவை குறைக்க தானே ஒரு வண்டியை தயார் செய்து கொடுத்தார். அதன்படி முதலில், தன்னிடம் இருந்த பழைய சைக்கிள்களின் வீல்களை எடுத்து, ஓட்டுவதற்கு ஏற்றபடி பென்ட் எடுத்து, ஒன்றாக  கம்பிகளோடு சேர்த்து வெல்ட் வைத்தார்.
தனக்குத் தெரிந்த ஆசாரியிடம் சென்று பழைய மரக் கட்டில்களின் நான்கு கால்களைப் பெற்று வந்து, அதை பழைய இத்துப் போன மரத் தகடுகளோடு மேலும் கீழுமாக இணைத்து, அடியில் குப்பை சேகரித்து வைக்க, ஐஸ் பெட்டி எடுத்துச் செல்ல இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, ஒரு பக்காவான தள்ளு வண்டிக் கடையை தயார் செய்து விட்டார் பாய்.
தள்ளு வண்டியைப் பார்த்ததும் குதுகலம் அடைந்த ராஜேஷ் தானே அதற்கு வண்ணம் தீட்டி அழகு பார்த்தான். அவன் முதன் முதலாக ஒரு வேலையில் ஈடுபாடு காட்டியதை அன்று தான் ராஜேஷப்பா பார்க்கிறார். அவருடைய முகத்தில் குடி கொண்ட சந்தோஷத்திற்கு திருஷ்டி கழிக்கும் விதமாக வண்ணம் தீட்டிய ராஜேஷ் முடிவாக தள்ளு வண்டியின் முன்னால், மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்று எழுதி ரஜினியின் போட்டோவை ஓட்டினான்.
அப்பன் கஷ்டப்பட்டு கடன் வாங்கித் தொழில் செய்ய வழி காட்டிக் கொடுக்குறான். இவன பாரு! சினிமா வசனத்தை வண்டியில எழுதுறான் முகம் சுளித்தார் ராஜேஷம்மா.
ஆரம்பிச்சிட்டியா? நம்ம கடையில ஜூஸ் குடிக்க வர்றவங்க எல்லாம் யூத்-மா! அவங்களுக்கு இப்படி பேரு வெச்சாத் தான் புடிக்கும். கருப்ப சாமி துணை எல்லாம் பழைய ட்ரெண்டு என்று சொல்லி விட்டு கிளம்பினான் ராஜேஷ். தொங்கிப் போன முகத்தோடு நிற்கும் மனைவியிடம் சாந்தமாக எடுத்துரைத்தார் ராஜேஷப்பா.
உனக்கு இதன் பின்னால் இருக்கும் அரசியல் புரியலைடி. சினிமாவும் ஒரு வியாபாரம் தான். அதுவும் சில நுணுக்கங்களை மனசுல வெச்சே எடுக்கப் படுது. யாருக்கு பொழுது போக்கு மிக அவசியம்? கஷ்டப்படும் ஜனங்களுக்கு தான்! நம்மள மாதிரி ஜனங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை திரையில காட்டி தானே நடிகர்கள் எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க? அன்னைக்கி ஆட்டோக் காரனா நடிச்சா சக்கை போடு போட்டிச்சு! இன்னைக்கு எல்லா நடிகனும் ஐ.டி கம்பெனியில வேலை செய்ற மாதிரி படம் எடுக்குறான். இது இப்படி தான் இருக்கும்! ஒரு கட்டத்துல எது வாழ்க்கை-ன்னு அவனே புரிஞ்சுக்குவான்
அவர் பேசி முடிப்பதற்குள் வாசலைத் தாண்டி விட்ட வண்டியை நிறுத்தி அம்மா ஏதோ மறந்து விட்ட எண்ணத்தில் உள்ளே போய் வெளியே வந்தார். நான்கு எலுமிச்சை பழங்களை வண்டியின் சக்கரங்களுக்கு அடியில் வைத்து மிதிக்கச் சொல்லி, நான்கு தூண்களிலும் மஞ்சள் தேய்த்து மங்களகரம் ஆக்கினார்.
உஹும்! இது அதை விட டேஞ்சர் என்று ராஜேஷப்பா சிரிக்க, அவர் குமட்டில் மஞ்சள் கையால் ஒரு குத்து விட்டார் அம்மா. இருவரும் மனதில் நம்பிக்கையோடு வியாபாரத்திற்குப் போகும் தன் மகன் போகும் திசையை பார்த்து பெருமூச்சு விட்டனர்.
வண்டி வைத்த முதல் வாரம் வியாபாரம் டல் அடித்தது. ராஜேஷப்பாவிற்கு தேர்வு செய்த இடம் சரியில்லையோ என்று சந்தேகம் எழத் தொடங்கியது.
காலை எட்டு மணிக்கி போறே. சாயந்திரம் ஏழு மணிக்கு வர்ற. பத்தில் இருந்து அஞ்சு மணி வரை பத்தே பத்து பேர் தான் லெமன் சோடா வாங்கி குடிச்சிருக்கான். இப்படி தினம் நூறு ரூவா சம்பாரிச்சு நீ என்னைக்கி முன்னேறிப் போறது? என்று கேட்டார்.
ஐயோ! அப்பா, இருப்பா...இப்போ தானே கடை போட்டிருக்கோம். இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வரும். அதுக்குள்ளே முன்னேறிப் போறதைப் பத்தி பேசாதே
ராஜேஷிற்கு அந்த ஊரின் பானி புரி விற்பனையாளர்களை விட்டுப் பிரிய மனமில்லை. அவர்கள் இவனைக் கவர்ந்திருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. பானி பூரி விற்பனை என்பது சாதாரண விஷயம் அல்ல என்று அவன் எப்போதும் நினைப்பான். அவர்களோடு எப்போதும் காலம் கழிப்பதால் அவனுக்கு இப்படி தோன்றி இருக்கலாம். அவர்கள் எல்லோரும் கூடி ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி வருகின்றனர். அந்த வீட்டில் எட்டு வண்டிகளை வைக்க போதிய இடம் இருப்பதால் அதிக வாடகை கொடுத்து குடி பெயர்ந்திருந்தனர்.
தினமும் காலை எழுந்தவுடன் வெங்காயம் வெட்டுவதற்கும், கேரட் துருவதற்கும், சேர்வா செய்வதற்கும், சுண்டல் வேக வைப்பதற்கும் மூன்று பேர் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். வேலை முடிந்ததும் அவர்கள் சென்ற நாளின் பாத்திரங்களை கழுவுதல், சென்னை கொண்டித்தோப்பில் உள்ள இந்தி பேசும் நண்பர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பூரிகளை வாங்கி வருதல் ஆகிய வேலைகளுக்கு நேரத்தை செலவிடுவர்.
மற்ற எட்டு பெரும் ஒவ்வொரு வண்டியிலும் அன்றைக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, மாலை நான்கு மணி அளவில் வியாபாரத்திற்கு செல்வர். லாபத்தை பதினோரு பங்காக பிரித்துக் கொண்டு, தங்களுடைய தினச் சாப்பாடு மற்றும் இதர தேவை போக மீதத்தை பீகாரில் உள்ள தங்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பி வைப்பார்.
இவர்களுடைய வாழ்க்கையை ஒரு ஓரத்தில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் ராஜேஷிற்கு வாய்த்ததனால், தனக்கென்று தனி வியாபாரம் வந்த பிறகும் அவர்களுடைய பணியை ரசிப்பதற்காகவே பானி புரி கடைக்கு அருகிலேயே தன்னுடைய கடையையும் நிறுவிக் கொண்டான்.
அவனுக்கு அப்பாவின் சந்தேகம் புரியாமல் இல்லை. ஆனால், அதற்கு அவனிடம் தீர்வும் இல்லை. அந்த இடத்தில் பானி புரி வியாபாரம் பிய்த்துக் கொண்டு போவதற்கும், தன்னுடைய வியாபாரம் டல் அடிப்பதற்கும் என்ன காரணம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வாரம் கழித்து அப்பா மெதுவாக அவனுடைய நடவடிக்கைகளை நோட்டம் விடத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு விவரம் புரிந்தது.
ராஜேஷ் கடை விரித்திருக்கும் இடம் ஒரு மிகப் பெரிய தனியார் பள்ளியின் அருகில் இருந்தது. அந்த பள்ளியை சுற்றி உருவான புதிய குடியிருப்புப் பகுதியாக அது வளர்ந்து நிற்கிறது. அங்கு வசிப்பவர்களில் பலர், வீட்டில் குறைந்தபட்சம் ஒரு குழந்தையை/பதின்பருவப் பிள்ளையை வைத்திருக்கின்றனர். அதனால் தான் அங்கே பானி புரி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. அங்கு வரும் பிள்ளைகள் எல்லோரும் மாலை நான்கு மணிக்கு மேல் அங்கு கூடுவது வழக்கம். வீடுகளின் ஆண்கள் அதிகாலை வேலைக்குச் சென்று விட்டு இரவு சாய்ந்த பிறகே வீட்டிற்கு வருவார்கள். இல்லத்தரசிகள் கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டிலேயே அடைந்து கிடப்பார்கள். அதனால் வெயில் நேரத்தில் அந்த இடத்திற்கு வரும் ஆட்கள் குறைவு. அந்தக் குடியிருப்பைத் தாண்டி வழிப்போக்கர்களாக செல்லும் ஆட்களும் இல்லை என்பதாலும், மக்கள் கூடும் அலுவகங்களோ, மருத்துவ மனைகளோ கிடையாது என்பதாலும் ஜூஸ் கடைக்கு அங்கு வேலை இல்லை.
இதை அறியாத ராஜேஷ் வாரங்கள் தாண்டி வியாபாரம் சூடுபிடிக்க காத்துக் கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டார் ராஜேஷப்பா. விவரத்தை சொல்லி,
அரசு ஆஸ்பத்திரி பக்கமா ஒரு இடம் பாத்து வெச்சிருக்கேன். பிரசவ வார்டும் அங்கே தான் இருக்கு. எதிரிலேயே தாலுக்கா ஆபீசும் இருக்கு. அதனால நிறைய வியாபாரம் ஆகும் என்று ராஜேஷிற்கு அறிவுரை சொன்னார்.
அப்பா சொல்வது சரி என்று பட்டாலும் சிடு மூஞ்சியுடனேயே அவன் ஒப்புக் கொண்டான். தன்னுடைய சந்தோசம் பறிபோய் விட்டதே என்று அவன் கவலை கொண்டான். ஆனால், கூடியவிரைவிலேயே எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடிய பேச்சுத் திறமையின் காரணமாக ராஜேஷின் கடையில் டேரா போட்டு அரட்டை அடிக்க வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானது.
ஆஸ்பத்திரியில் அடிபட்டு, நோய்வாய்பட்டு அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களின் கணவன்கள், தாலுக்கா அலுவலகத்தில் காத்திருக்கும் போது கூடும் கூட்டம் என அவனுடைய கடையில் தினசரி வந்து போகும் ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமானது. கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பதில் இருந்து எழுபது பேர் சாத்துக் குடி சாறும், சுமார் நூறு பேருக்கும் அதிகமானோர் எலுமிச்சை சாறு/சோடாவும் குடித்துச் சென்றதால் நல்ல வருமானம் பார்க்க முடிந்தது. ராஜேஷின் கடினமான உழைப்பை மெச்சி பாராட்டிய அப்பா கூடவே ஒரு வியாபார யுக்தியையும் கற்றுக் கொடுத்தார்.
நீ எப்போதும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கணும். நம்ம கிட்ட வியாபாரம் செய்ய வர்றவங்க, அவங்க குடுத்த காசுக்கு கொஞ்சம் கூடுதலா பொருள் எடுத்துட்டு போனா சந்தோஷப் படுவாங்க. தன்னுடைய வாடிக்கையான கடையையும், புதுசா போட்டிருக்கு உன்னுடைய கடையையும் ஒப்பிட்டு எது சிறந்தது-ன்னு எடை போடுவாங்க. அதனால, நீ பத்து ரூபாய்க்கு கொடுக்குற ஜூஸாக இருந்தாலும், இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கிற ஜூஸாக இருந்தாலும் யோசிக்காம ஒரு கால் கிளாஸ் அதிகம் கொடுக்க பழகிக்கோ! உண்மையில் உனக்கு அதிக செலவினம் தண்ணீரிலோ, ஐஸ் கட்டியிலோ தான் ஆகப் போகுது. ஆனாலும் அது அவங்களுக்கு கொடுத்த காசுக்கு ஏமாறாம வியாபாரம் செஞ்ச திருப்தியை கொடுக்கும்
அப்பாவின் இந்த அறிவுரையையும் ராஜேஷ் கடைபிடித்தான். அவன் காதுபடவே சிலர் நண்பர்களுடன் பேசும் போது,
இங்கே ஒரு கிளாசுக்கு மேல வந்தா எடுத்து தனியா வெச்சுக்காம நமக்கே குடுத்துடுவான். நல்ல பையன்! அதனால தான் இங்கே அடிக்கடி வர்றது என்று குறிப்பிடுவதை கேட்டு அப்பாவின் அனுபவத்தை மெச்சினான்.
மேலும் தன்னுடைய ஈடுபாட்டின் பேரில் மேல் தட்டு வர்க்கத்தினரின் வருகையை அதிகரிக்க சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்தான். தன்னுடைய தலைக்கு பொருந்தும்படியாக ஒரு சமையல்கார தொப்பியை தைத்து, மேலங்கியும் கையுறையும் வாங்கி அணிந்து கொண்டு ஜூஸ் போடத் தொடங்கினான். மேலும், மேற்கத்திய பாணியில் உடை அணிந்து வந்தால் அவர்களுக்கு பேப்பர் கப்பில் ஜூஸ் கொடுக்கத் தொடங்கினான். தனியாக ஸ்டூல் போட்டு அவர்களை உட்கார வைத்தான். இதனால் காரில் செல்பவர்களும் இறங்கி இவன் கடைக்கு வந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.
தன்னுடைய மகனின் இத்தகைய சமயோசித புத்தியைப் பார்த்து ராஜேஷப்பா நெகிழ்ந்து போனார். அவனுடனான முட்டல் மோதல் போக்கை சற்று தளர்த்திக் கொண்டு வீட்டில் மரியாதையாக அவனை நடத்தத் தொடங்கினார். ஞாயிறுகளில் அவன் வீட்டில் தங்கும்படியாக ருசியாக சமைத்து அவனுக்கு பரிமாற தானே மெனக்கெட்டு கடைக்குச் சென்று கறி வாங்கித் தந்தார். இதனால் ராஜேஷும் அப்பாவுடன் நெருக்கமானதோடு அவர் மீதிருந்த பயத்தை போக்கிக் கொண்டான்.
பயம் குறைந்ததோடு வீட்டிற்கு அவன் தரும் பணமும் குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் தனக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டான்.
நான் தான் அவனுக்கு எதுவும் வாங்கித் தரலை. அவனாவது வாங்கி சந்தோஷமா இருக்கட்டும் என்று விட்டு விட்டார் அப்பா.
ஒரு நாள், செல் போன் வாங்கி வந்து ஆசையாக அப்பாவிடம் காட்டினான்.
கடையில சும்மா இருக்கும் போது போர் அடிக்கிது பா. கடைக்க வர்ற பசங்க நிறைய படம் ஏத்திக்கிட்டு வர்றாங்க. நானும் வாங்கிப் பாத்தேன்-ன்னா கொஞ்சம் பொழுது போகும் என்றான்.
அதுக்காக பத்தாயிரத்துக்கு செல் போன் வாங்கனுமா? என்று கேட்க வாய் எடுத்தவர் அப்படியே வார்த்தைகளை அமுக்கி விட்டார்.
அடுத்தபடியாக, என்னோட ஃப்ரென்ட் ஒருத்தன் புது வண்டி வாங்கப் போறான். அதனால அவன் கிட்ட இருக்குற பழைய பல்சரை விக்கப் போறானாம். நமக்கும் ஐஸ் கட்டி எடுத்து வர, கடைக்குப் போய் வர, தண்ணிக் கொடம் தூக்க எல்லாம் வண்டி தேவைப் படுதுல்ல? இருபதாயிரம் தானாம். வாங்கிக்கவா? என்று கேட்டான்.
எங்கே வேண்டாம் என்று கூறினால் மறுபடியும் சண்டை ஆரம்பித்து விடுமோ என்று யோசித்தவர்,
உனக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. உங்க அம்மாவுக்கு செக் அப் பண்ணலாம்-னு பாத்தேன். மூணுமாசமா நீ நிறைய செலவு பண்றதால தள்ளிப் போகுது. வெய்யில் போன பிற்பாடு வியாபாரம் டல் அடிக்கும். சரி உன் விருப்பப் படி செய்! நாம வேற ஏதாச்சும் வித்து வைத்தியம் பார்த்துக்கலாம் என்று சூசகமாக சொல்லி விட்டார்.
தான் அப்படிச் சொன்னால் அவன் நிச்சயமாக அம்மாவின் மருத்துவ செலவைத் தான் கவனிப்பான் என்று அவர் நினைத்தது தவறாகப் போய் விட்டது. சந்தோஷமாக வண்டியை வாங்கி வந்து அப்பாவிடம் சாவியைக் கொடுத்து ஓட்டச் சொன்னான்.
கொஞ்ச நாளைக்கு இருந்த நிம்மதி போயிடும் போல இருக்கே என்று மனம் கோணத் தொடங்கினார் ராஜேஷப்பா. தன்னுடைய குறையை ரயிலில் போகும் போது மறுபடியும் சேகரிடம் சொல்லி வருத்தப்பட்டார். சேகர் எதுவும் சொல்லவில்லை. தலை ஆட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு ஒரு நாள் அவனை சந்திக்க ராஜேஷப்பாவிற்கு தெரியாமல் கடைக்கே சென்று விட்டார்.
அவர் ராஜேஷின் கடைக்குச் சென்று மூன்றாமவர் போல ஜூஸ் குடிக்க தன்னுடைய நண்பரோடு நின்றிருந்தார்.
ஒரு சாத்துக் குடி ஜூஸ். ஒரு லெமன் சோடா என்று அவனிடம் சொல்ல, ராஜேஷ் போட்டுக் கொடுத்து விட்டு எச்சில் கிளாஸ்களை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைத்திருந்த கலங்கிய நீரில் முக்கி எடுத்தான்.
சாவு கிராக்கிங்க... என்று திட்டி விட்டு மறுபடியும் அதன் மேல் நல்ல நீரை குடத்திலிருந்து எடுத்து ஊற்றி, இரு விரல்களை விட்டு தேய்த்துக் கழுவினான்.
சோத்துக்கு எவன் கால்ல வேணாலும் உழுவானுங்க..ஒரு சாத்துக்குடி ஜூசுக்கு காசு கொடுக்க வக்கக் காணும் என்றவன்,
ஒரு கிளாசில் ஊற்றிய நீரையே அடுத்த க்ளாசிலும் ஊற்றிக் கழுவி கீழே ஊற்றினான். அது ராஜேந்திரனின் வலக்கை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கை கூப்பி அல்லக் கையிடம் இருந்து பெற்ற பழைய அரசியல் பேனரின் மிருதுவான மேற்பரப்பில் தேங்கி வழிந்தோடியது.
வழிந்தது போக தேங்கியிருந்த நீரை கையால் தள்ளு வண்டியின் ஒரு ஓரத்தில் இருந்த துளையின் பக்கமாக ஒதுக்கி விட, அது அடியில் சொருகப் பட்டிருந்த வாஷிங் மெஷின் குழாய் வழியாக பாதாள சாக்கடை கால்வாய்க்குள் ஓடிக் கலந்தது. ஜூஸ் வண்டியின் அடியில் வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த நாய் வாஷிங் குழாயில் இருந்த ஓட்டை வழியாக ரோட்டில் கசியும் நீரை நாக்கை வைத்து நக்கிக் குடித்து, ஈரத்தின் சுகம் காணப் படுத்துக் கொண்டிருந்தது.
அந்த நாயின் முதுகில் பலமாக ஒரு எத்து விட்டான் ராஜேஷ். அது, ‘கை...கை...கை... என்று கத்திக் கொண்டே பூக்கட்டும் அம்மாவின் பக்கமாக சென்று முனகியது.
அட ஏம்பா! இந்த வயசுல உனக்கு இவ்வளவு கோபம்? என்று பேச்சுக் கொடுத்தார் சேகர்.
பின்ன என்னங்க? இந்த நாயுக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?
எவங்களுக்கும்?
உங்களுக்கு முன்னாடி ஜூஸ் குடிச்சிட்டு கடன் வெச்சிட்டு போனானுங்களே! அவங்க தான். மூஞ்சியும் கண்ணாடியும் அவனும். ஒரு கிழிஞ்ச பேனரை இலவசமா கை நீட்டி அவங்க கிட்ட இருந்து வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கு பாருங்க. ஒவ்வொரு முறையும் வந்து ஜூஸ் குடிச்சிட்டு போறானுங்க. காசு கேட்டா அப்புறம் தர்றேன்
அவன் அரசியல் வாதி. அதிகாரத்தை இப்படிப் பட்ட அற்ப காரியங்களுக்கு பயன்படுத்துறான். நீ நல்லவன் தானே? அம்மாவோட சிகிச்சைக்கு பணம் கொடுத்தியா?
ராஜேஷிற்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் அப்பாவிற்கு தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும். தலை குனிந்து நின்றான்.
நீங்க யாருங்க சார்?
நான் யாருங்குறது இருக்கட்டும். கொஞ்ச நேரம் முன்னாடி நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே? கொஞ்சம் யோசிச்சு சொல்லு?
ஜூஸ் போட்டுக் கொடுத்தேன்
திட்டிகிட்டு இருக்கும் போது என்ன செஞ்சே?
க்ளாஸ் கழுவி வெச்சேன்
எப்படி கழுவுனே? ராஜேஷ் யோசித்தான்.
முதல்-ல ஒரு பாத்திரத்தில் க்ளாசை முக்கி கழுவிட்டு, அதன் மேல நல்ல தண்ணீர் ஊத்தி கழுவும் போது, ஒரு குவளை நீரையே அத்தனைக்கும் பயன்படுத்தலாம்-னு உனக்கு சொல்லிக் கொடுத்தது யாரு?
சேமிப்பு நம்ம நாட்டு மக்களுடைய ரத்தத்துல ஊறின விஷயம். அது அவர்களுடைய எல்லா செய்கைகளிலும் இருக்குது. ஒரு கதை கேள்விப் பட்டிருப்பியே! மூணு பெண்களை சேத்துல நடக்கச் சொன்னாங்க. ஒரு குவளை நீர் கொண்டு யார் அந்த சேற்றை முழுமையா கழுவுறா-ன்னு பார்த்தாங்க-ன்னு. அந்த சேமிப்புப் பழக்கம் பெண்களுக்கு மட்டும் இல்லை. ஆண்களுக்கும் வேணும்.
சட்டை வாங்குறது, பைக் வாங்குறதெல்லாம் தப்பா? எல்லாரும் தான் செய்றாங்க
தப்பில்லை. உன் அம்மாவோட உடம்பைக் காட்டிலும் அது முக்கியம்-னு நீ நினைக்கிறது தான் தப்பு. நான் அதிகம் பேச விரும்பலை. இந்தா புடி.., முப்பத்தி ஐந்து ரூபாயை சில்லரையாக நீட்டிய சேகர் வணக்கம் சொல்லி விட்டுச் சென்றார்.
ராஜேஷ் அவர் போகும் திசையையே பார்த்துக் கொண்டு நின்றான். மகிழ்ச்சி குளிர்பான நிலையம் என்கிற அவனுடைய தள்ளுவண்டியின் பெயரை உடனடியாக மாற்றவேண்டும் போல இருந்தது அவனுக்கு. ரஜினியின் போட்டோவை கிழித்துவிட்டு அப்பாவின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் இப்படியே இன்னும் மூன்று நாட்களுக்கு தோன்றுகிறதா பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டவனாக அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டான். 

0 comments: